
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்து சுமார் 10 வருடங்கள் கழித்து 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி யாரும் எதிர்பார்க்காத வகையில் பயங்காரவாதத் தாக்குதல் ஒன்று நடந்தேறியது.
2019ஆம் ஆண்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் தின திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கொழும்பு கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு செபஸ்டியன் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகிய தேவாலயங்களிலும் அதேநேரம், கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்களான கின்ஸ்பேரி, சங்கிரிலா மற்றும் சினமன் கிரேன்ட் ஆகிய ஹோட்டல்களையும் இலக்கு வைத்து இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 279 பேர் உயிரிழந்திருந்தனர். அதுமாத்திரமன்றி, உயிரிழந்தவர்களில் 40 வெளிநாட்டுப் பிரஜைகள் , 45 இற்கும் அதிகமான குழந்தைகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்ததாக விசாரணைக் குழுக்களின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என பல்வேறு கோணத்தில் விசாரணைகள் முடக்கி விடப்பட்டிருந்த நிலையில், இலங்கையின் தேசிய தௌஹீத் ஜமாத், ஜமாத்தே இஸ்லாமி, இப்ரஹிம் பயங்கரவாத அமைப்புக்கள் இணைந்து குண்டுத் தாக்குதல்களை நடத்தியது கண்டறியப்பட்டது.மேலும் இஸ்லாமிய அரசுப் பயங்கரவாதிகள் இதற்கு உரிமை கோரியிருந்ததுடன் குறித்த பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பகர் அல் பக்தாதி காணொளியில் தோன்றி அதனை ஒப்புக்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதான சூத்திரதாரியாக செயற்பட்ட சஹரான் ஹசிம் தலைமையில் இந்த பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்றதும் கண்டறியப்பட்டது.
இதனால் இஸ்லாமியர்களை இலக்கு வைத்து நாட்டின் பல பகுதிகளில் வன்முறைகள் இடம்பெற்றன.பல இஸ்லாமியர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் தீ வைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டிருந்தன.

இந்த சம்பவத்துக்கு பிறகு வருகின்ற ஈஸ்டர் இன்றாகும்(12).நாட்டில் நிலவும் கொரோனா நிலவரம் காரணமாக நாட்டிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் திங்கள், வியாழன், பெரிய வெள்ளி, அல்லேலூயா சனி மற்றும் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை ஆகிய அனைத்து நிகழ்வுகளும் ரத்துசெய்யப்பட்டதாக கொழும்பு பேராயர் தெரிவித்திருந்தார்.
இன்றைய தினம்(12) ஈஸ்டர் தின நிகழ்வுகள் கொழும்பு பேராயர் இல்லத்தில் நடத்தப்பட்டதுடன், திருப்பலி ஒப்புக் கொடுத்தல் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பேராயர் அவர்கள் பயங்கரவாதத் தாக்குதல்தாரிகளைப் பற்றி கருத்து தெரிவித்த போது “எங்களை அழிக்க வந்த எதிரிகளுக்கு நாங்கள் அன்பை வழங்குகின்றோம். நாங்கள் அவர்களை மன்னிக்கிறோம்” என்று கூறினார்.