
கோட்டா கோ கம, மைனா கோகம அமைதி போராட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமையை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகள் (மே 9 வன்முறைகள்) தொடர்பில் நேற்று (16) நண்பகலாகும் போது சுமார் 670 பேரை பொலிஸார் நாடளாவிய ரீதியில் கைது செய்திருந்தனர்.
நாடளாவிய ரீதியில் இதுவரை பதிவானதாக 791 சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், அவை தொடர்பில் இவர்களைக் கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்ட 664 பேரில் நேற்று நண்பகல் 12.00 மணி வரை நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்ட சுமார் 210 பேருக்கு பிணைக் கிடைத்துள்ளதுடன், 280பேர் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் நீதிமன்றங்களில் ஆஜர் செய்ய தயார் நிலையில் இருந்தனர்.
9 ஆம் திகதி பதிவான வன்முறைகளின் ஆரம்ப புள்ளியான, கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம மீதான அத்து மீறிய தாக்குதல்கள் தொடர்பில் சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சரத் சந்ரவின் கீழ் இடம்பெறுகிறது.
இந்நிலையிலேயே அது தவிர்த்த ஏனைய வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் கீழும் மாவட்டங்களின் பிரதிபொலிஸ் மா அதிபரின் கீழும் அந்தந்த பொலிஸ் பிரிவுகளின் குற்றத் தடுப்புப் பிரிவுகளினால் விசாரணைகள் இடம்பெறும் நிலையில் இந்த 664 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் அரசியவாதிகள் வீடுகள், சொத்துக்களுக்கு சேதம் விலைவித்தமை தொடர்பிலேயே பெரும்பாலான கைதுகள் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த அரசியல்வாதிகளின் சிபாரிசின் பேரில் நியமிக்கப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகள், அரசியல்வாதிகளின் தேவைக்கு அமைய அப்பாவிகள் பலரைக் கைது செய்துள்ளதாக சட்டத்தரணிகள் பலர் விசனம் தெரிவித்துள்ளனர்.
வன்முறைகள் தொடர்பில் இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள 791 முறைப்பாடுகளில் அதிகளவான முறைப்பாடுகள், மேல் மாகாண பொலிஸ் நிலையங்கலுக்கே கிடைத்துள்ளதாக கூறும் பொலிஸார் மேல் மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 444 என தெரிவித்தனர்.
அத்துடன் தென்மாகாண பொலிஸ் நிலையங்கலுக்கு 118 வன்முறைச் சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் நேற்று வரை கிடைக்கப் பெற்றுள்ளன. ஏனைய முறைப்பாடுகள், மத்திய மாகாணம், வட மத்திய மாகாணம், வட மேல் மாகாணம், கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. வட மாகாணத்தில் வன்முறைகள் குறித்து சம்பவங்கள் பதிவாகவில்லை என அறிய முடிகிறது.