
மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின், பரப்பாங்கண்டன் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து சென்ற மோட்டார்சைக்கிளும், முருங்கன் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி வந்த பிக்கப் ரக வாகனமும் மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த குறித்த இரு பெண்களுமே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த இரு பெண்களும் உடன் பிறந்த சகோதரிகளான மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சந்தியோகு லிண்டா, மன்னார் அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் சந்தியோகு டெரன்சி என தெரியவருகிறது.

குறித்த இருவரும் கடமை முடிந்த நிலையில் மன்னாரில் இருந்து கட்டை அடம்பன் பகுதியில் உள்ள அவர்களுடைய வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த குறித்த இரு பெண்களினதும் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த பிக்கப் ரக வாகனத்தின் சாரதி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உயிழங்குளம் மற்றும் மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.