
வட்டுக்கோட்டையில் நான்கு பாடசாலைகளின் அலுவலகங்களை உடைத்து பெறுமதியான பொருள்களைத் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரையும் மே 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட திருடப்பட்ட பொருள்கள் நீதிமன்றில் சான்றுப்பொருள்களாக பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டன.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கோட்டை கார்த்திகேசு வித்தியாலயம், தொல்புரம் விக்னேஸ்வரா வித்தியாசாலை, பொன்னாலை வரதராஜப்பெருமாள் வித்தியாலயம் மற்றும் சுப்ரமணிய வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் நடைமுறையிலிருந்த காலப்பகுதிதியில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
பாடசாலைகளின் அலுவலகங்களை உடைத்து மடிகணினி உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் திருடப்பட்டிருந்தன.
அதுதொடர்பில் பாடசாலை அதிபர்களால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வட்டுக்கோட்டை பொலிஸார், திருடப்பட்ட பொருள்களுடன் 3 பேரைக் கைது செய்தனர்.