
யாழில் ஊரடங்கு சட்ட நேரத்தில் சீவல் தொழிலாளர்களினால் சேகரிக்கப்படும் பதநீரை போத்தலில் அடைப்பதற்கான வேலைத்திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் பனை அபிவிருத்தி சபை மற்றும் கலால் திணைக்களம், சுகாதார பரிசோதகர்களுடன் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதனையடுத்து அது தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே அரசாங்க அதிபர் மகேசன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கலந்துரையாடலின் முடிவில் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், குறிப்பாக சீவல் தொழிலாளர்கள் ஊரடங்கு நேரத்தில் அவர்களால் சேகரிக்கப்படும் பதநீரை விற்பனை செய்ய முடியாதவாறு சகல தவறணைகளும் மூடப்பட வேண்டும் என்ற நிலை காணப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் சீவல் தொழிலாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக இன்றைய தினம் கூட்டம் இடம் பெற்றிருந்ததாக கூறிய அவர், ஊரடங்குச்சட்டம் நீக்கப்படும் வரை சீவல் தொழிலாளர்களால் சேகரிக்கப்படும் பதநீர் அந்தந்த பிரதேசங்களில் உள்ள சங்கங்கள் பெற்று அவர்கள் அதனை போத்தலில் அடைக்கவுள்ளதாக கூறினார்.
அதோடு மிகுதி பதநீரை மதுசார தயாரிபுக்காக கலால் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கவும் இன்றைய தினம் தீர்மானிக்கப்பட்டதாக கூறிய அரசாங்க அதிபர், ஊரடங்கு வேளையில் பதநீர் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்குரிய அனுமதிகள் தொடர்பில் இன்றைய கலண்டுரையாடலிம் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் குறித்த அனுமதிகள் குறித்த வரையறையுடன் மேற்கொள்ளப்படும் எனவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.